கைக்கூ கவிதைகள் பகுதி 2
ஜாதிகள்
குட்டையும் நெட்டையுமாக
கொடிக்கம்பங்கள்
ஜாதிகளை தாங்கியபடி..!!
விருந்து
குளமெங்கும் கொண்டாட்டம்
தவளைக்கும் தாமரைக்கும் திருமணமாம்...
விருந்துக்கு தயாரானது கொக்குகள்...!!
பசி
ஆற்றங்கரையில் அமலைச்செடிகள் அகற்றம்..
பசியாறியது காக்கைகள்..!!
அவலம்
கோயில் வாசலில் மல்லிப்பூ விற்றாள் ஒரு விதவை
கடவுளும் கலங்கிப்போனார்...!
காகித பூக்கள்
கசக்கி எறியப்பட்ட
காகிதப் பூக்கள்
அறையெங்கும் காதல் வாசம்...!
சிரிப்பு
கோயில் யானையை
பார்த்துச் சிரித்தேன்
தலையில் கொட்டு விட்டது...!!
கனவு
கனவு குமிழிகள்
காணாமல் போனது
காதல் எனும் கைபட்டதும்...!!
மழை வரும் சத்தம்
இறக்கைகள் விரித்து பறக்கத் தயாரானது என் வீட்டுக் குடை
தூரத்தில் எங்கோ மழை வரும் சத்தம்...!!
புத்தகங்கள்
என் வீட்டுப் புறாக்கள்
எங்கும் செல்வதில்லை.. இறக்கைகள் மடித்தபடி
அலமாரியில் அமர்ந்திருக்கும்...!
கயிலாய இராணி
கற்சிலையென எண்ணி
காதல் கொண்டேன்
அவள் கையிலாய ராணியாம்...!
ஓரமாய் போ
உலா வரும் நிலவே
ஓரமாய்ப் போ
யாம் உறவு கொள்கிறோம்...!!
விசிறி
பூக்களுக்கு வியர்க்கின்றதா ... விசுறிகின்றது வண்ணத்துப்பூச்சி.
கல்மனம்
கூண்டினுள் பிரசவித்தது
என் வீட்டுக்கிளி.. என் இதயத்தை உடைத்துவிட்டேன்...!!
அம்மா
அறுபட்டது பாதம் அடிமண்ணில் பீங்கான் துண்டங்கள்
அவள் நினைவுகளும் கசிந்தது இரத்தத்துடன்...!
அன்னை மடி
அகிலத்தின் அனைத்து வலிகளுக்கும் ஆயுர்வேத மருந்து அன்னையின் மடி..!
பனைமரம்
என் தாத்தா வளர்த்தார்...
தோட்டத்தில் ஒரு குச்சிமிட்டாய்
பனைமரம்..!
கிழவி
வேக வேகமாய் வளர்ந்தது என் வீட்டில் வெத்தலைக்கொடி..!
கிழவிக்கு எங்கு போவேன் ..!!
பிளாஸ்டிக் ரோஜாக்கள்
புதர் எங்கும் பூத்திருந்தது பல பிளாஸ்டிக் ரோஜாக்கள்...
காதலர் தினத்தன்று...!!
காதல் தோல்வி
பூக்கடைக்காரி காதல் தோல்வி போலும்...
பிளாஸ்டிக் ரோஜாக்களை விற்றுக்கொண்டிருந்தாள்...!!
மலரின் வாசம்
மலர்களின் வாசம்
ரசிக்க முடியவில்லை
இறுதி ஊர்வலத்தில்..!
சதுரங்க விளையாட்டு
கருப்பு வெள்ளை ராஜ்ஜியம்..
ராணிகளின் ஆட்சி
சதுரங்க விளையாட்டு ..!
வண்ணத்துப் பூச்சி
எங்கிருந்து வந்தான்
எதற்காக முத்தமிட்டான்
எதுவும் புரியவில்லை அந்த ரோஜாவுக்கு...!!
கயித்துக் கட்டில்
இதோ அதோ என்று
இழுத்துக்கொண்டிருந்த உயிரை...
இறுக்கி பிடித்திருந்தது அந்த கயித்துக் கட்டில்..! அப்பாவின் கை
வேதனைகளின் விளைநிலம்
என் அப்பாவின்
காய்ப்பேறிய உள்ளங்கைகள்...!
தாடி
வெண் மேகங்கள்
விளைந்திருக்கின்றன...
என் தாத்தாவின் முகத்தில்...!
#. மீன் தூண்டிலில்
பாம்பு சிக்கியது
மீன்களுக்கு கடவுளாகிப் போனேன்...!
சிலந்தி வலை
ஸ்பைடர்மேன் குடியிருப்பு
வீடெங்கும் சிலந்தி வலைகள் ..!
கைம்பெண்
வாடிய மலரானால் என்ன..!
வாசமுள்ளவள் நீ..
இறைவனும் உனை சூடிக் கொள்வானடி...!!
வெள்ளி மீன்கள்
ஆகாயக் கடலில்
வெள்ளி மீன்கள்
உலாவருகின்றன...
விழிகளால் சிறைப்பிடித்தேன்...!!
கார்காலம்
ஆகாயத்து பட்சிகள்
அழுது கொண்டிருந்தது
அது ஒரு கார்காலம்..!
மனக் குரங்கு
காடில்லா காட்டில்
தாவுகின்ற
குரங்கு நான்..!
வேப்பமரம்
இவன்தான் என் மகன்
பெருமையோடு சொல்வார்
என் தாத்தா...
அந்த வேப்பமரத்தைக் காட்டி..!
எறும்புகள்
ஆயிரக்கணக்கான
படைவீரர்கள்
முற்றுகையிடப்பட்டது
மிட்டாய் துண்டு
எறும்புகள்...!
வெள்ளையனே வெளியேறு
வெள்ளையனே வெளியேறு... கோஷமிட்டு கொண்டிருந்தது..
அந்த குளத்து மீன்கள்...!
தஞ்சம்
ஊருணிக்கரையோம்
தஞ்சம் கொண்டிருந்தது பன்றிகள்..
உணவுக்கு பஞ்சமில்லை...!
விருந்து
போர்க்காலம்
விருந்து படைக்கப்பட்டது...
கழுகுகளுக்கு...!!
பலசரக்கு கடை
நாய்களும் பன்றிகளும் அனுதினமும் வந்து செல்கிறது
அந்த பலசர கடைக்கு...
குப்பைத் தொட்டி..!
சன்னலோர காற்று
சரமாரியாய் தாக்கியது.. சன்னலோர காற்று..
செத்துப்போனது என் சோகங்கள்
தட்டான் வேட்டை
அது ஒரு கார்காலம்
தென்னை ஒலையுடன் தெருவெங்கும் ஓடினோம்...
தட்டான் வேட்டை...!
தார்சாலை
வேகவேகமாய் ஓடிக்கொண்டிருந்தது
வரிக்குதிரைகள்
என் வீட்டருகில்...
தார்சாலை..!
# வேலியில் வெத்தலைக்கொடி வளர்ந்திருந்தது..
என் பாட்டியும் அந்த ஆட்டுக்குட்டியும்
ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டனர்..!
பயம்
இரவை கண்டு பயமில்லை
அந்த ஒளிர்கின்ற
கண்களுக்கே பயம்
தெருவிளக்குகள் ..!
முரண்
விறகு வெட்டி
ஒருவனின் சமாதியில்
வளர்ந்திருந்தது ஒரு செடி...
வாழ்வு முரண்பாடானது ...
ரோஜா மலர்
செடியில் வளர்ந்தவன்
கொடியில் குடிபுகுந்தான்..
அவள் கூந்தலில் ..!
வேட்டைக்காரர்
என் தாத்தா
ஒரு வேட்டைக்காரர்..
வீடெங்கும் பொண்வண்டு
சடலங்கள் ..!
வாழ்வு
படிதாண்டா பெண்ணவள்
ஊர் தாண்டி
உறங்கிக் கொண்டிருந்தாள்
அந்த மயானத்தில்...!
தட்டான்பூச்சி
அது கார்காலம்
ஊருமுழுக்க உயிருள்ள ஹெலிகாப்டர்கள்..
தட்டான் பூச்சி ..!
ஐந்து வயது அம்பானி
ஐந்து வயது
அம்பானி அவன்..
அனேக ஹெலிகாப்டர்கள்
கைவசம் உள்ளது..
தட்டான் வியாபாரி...!
சாயுங்கால மழை
சாயுங்கால மழை
சன்னலைத் திறந்தேன்..
சன்னல் இடுக்கில்
பல்லியின் எலும்புகள்...!
வீடு
பாமாலின் அட்டைபெட்டி
உச்சியில் கட்டி தொங்கவிட்டேன்
ஊர் குருவி வந்துவிட்டது...! தன்னம்பிக்கை
இன்று பொழிகின்ற
மழையில் நாளை
ஒரு காளான் பிறக்கும்...
நம்பிக்கையோடு நான்...!
வறுமை
குளம் வற்றியதால்
கொக்குகள் வந்திறங்கியது..
அந்த தொழுவத்திற்கு...!
விரதம்
தண்ணீர் வர தாமதமாகும்...
பூச்சிகளை உண்டு
விரதம் இருக்கிறது
கொக்குகள்...!
கைதிகள்
கருவேல மரங்கள்
அழிக்கப்பட்டது..
கைதிகளாய் சிக்கியது அனேக
மாடு பூச்சிகள்...!
நன்றி
வாழ்ந்து முடித்த இலைகள்
விழுந்து வணங்கியது
தன் வேரினை...!!
தாத்தாவின் தொப்பை
சதையாலான குப்பி தான்
எனினும் அதிகமாய்
நேசிக்கிறேன்...
என் தாத்தாவின் தொப்பையை...!
அதிசயம்
இது என்ன அதிசயம்
பூக்கள் புடவையில்
. வளர்ந்திருக்கிறது...!
வண்ணத்துப்பூச்சிகள்
பூக்களற்ற பூங்காவில்
ஒரு ஜோடி வண்ணத்துப்பூச்சிகள்
காதலர்கள் போலும்...
உடன்கட்டை
நான் வளர்த்த மரம்
என் மரணத்தின் போது
என்னுடனே வந்துவிட்டது...
உடன்கட்டையாக...!!
கிளிகள்
கோயில் மரங்களில்
கிளிக்கூட்டங்கள்
மரத்தடியில் கொய்யாப்பழ வியாபாரி...!
விரலின் வேதனை
என் வளர்கின்ற நகத்தை
நானே வெட்டி விட்டேன்..
விரலின் வேதனை
விளங்கவில்லை எனக்கு..!
நிதர்சனம்
சூரியன் போகின்றான்
வழியனுப்ப விரைகிறது
வானத்துப் பறவைகள் ..!
புத்தகக் கூடு
புத்தகத்தில் கூடுகட்டி
பலவருடம் காத்திருந்தேன்..
குட்டி போடும் அந்த
மயிலிறகுக்கு....
யுத்த முழக்கம்
வானமெங்கும் யுத்தமுழக்கம்
படையெடுக்கும் மேகங்கள்..
குடைக் கேடயங்களுடன் நான்!
சன்னல் பூக்கள்
அழகழகான பூக்கள்
சன்னலோரம் பூத்திருக்கின்றன
அந்த பேருந்தில்...!
கல்மரம்
காலியான நிலத்தில்
கல் மரங்கள் நடப்பட்டது...விளைந்தது வீடு
சோகம்
இரத்தம் தோய்ந்த இறகுகளை
சுத்தம் செய்கிறது எறும்புகள்.. பறவை இறந்ததை அறியாமல்..!
தண்ணீர்
காய்ந்த புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த
பசுவிடம் கேள்..
தண்ணீரின் மகத்துவத்தை..!
உரிமை
இட உரிமைக்காக
இரண்டு பிச்சைக்காரர்கள்
சண்டையிடுகிறார்கள்...
அந்த பேருந்து நிலையத்தில்...!
வேண்டுதல்
கோடைகால திருவிழா
மொட்டையடித்து கொள்கிறது
மரங்கள். . !
வெட்கம்
திடீரென வந்துபோனது
அந்த மழை..
வெட்கத்தில் சிணுங்கிக் கொண்டிருந்தது ஒரு
ரோஜா செடி....!
இறுதி ஊர்வலம்
இறந்த பறவையின்
இறுதி ஊரவலத்தில்
ஏராளமான எறும்புகள்..!
வினோத காதல்
முட்டி முட்டி முத்தமிடுகிறது மின்விளக்குகளை..
இரத்தப் பூச்சிகளின் காதல் ரம்மியமானது தான்...!
ஏக்கம்
விம்மி விம்மி அழுது கொண்டிருந்தது என்
வீட்டு மெழுகுவர்த்தி
விசாரித்துபார்த்தேன்.
விட்டில் பூச்சி வரவில்லையாம்..!
இறகுகள்
சிறகடித்துப் பறந்தது
சிட்டுக்குருவியொன்று...
சிக்கிகொண்டது
சிந்திய இறகுகள்...!
நுழைவாயில்
சொர்க்கமோ நரகமோ
நுழைவாயில்
சுடுகாட்டில் தான் உள்ளது ..!
மயக்கம்
ஒளிற்கின்ற விளக்கை
ஓயாமல் சுற்றுகிறது
ஒரு பூச்சி..
பார்வை போனது தெரியாமல்...!
சொர்க்க ரதம்
அந்த வண்டியை
சொர்க்கரதம் என்றார்கள்...
சுடுகாட்டில் கொண்டுபோய் விட்டது...!
#. என் தலையணை
வயிற்றுக்குள்
வாத்து முடி..!
பட்டினி
வயதான உடல்
எரித்துவிட்டனர்
பட்டினி கிடந்தது
மண்...!
மண்கருப்பட்டி
மழை வரும் போதெல்லாம்
மறக்காமல் எடுத்துவிடுவேன்..
காயவைத்த மண்கருப்பட்டியை..!
அணில்கள்
கூடை நிறைய
கொய்யாப்பழம்..
இலவசமாய் கிடைத்தது அணில்கள்...!
நடனபோட்டி
மழை வரும் நேரம்
மரங்கள் தயாராகியது நடன போட்டிக்கு...!
வியாபாரி
கொரோனா காலம்
ஆண்டவன் என்ன செய்துவிட்டான்..
அமரர் ஊர்திகள் அனேகம் செய்து விற்றுவிட்டான்...!
அமிர்தமும் நஞ்சு
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் நஞ்சு..உணர்த்தியது
தேநீரில் செத்து மிதக்கும் எறும்புகள்...!
திருவிழா
ஊர் திருவிழா
ஒளிரும் நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது...
ஒரு வேப்பமரம்...!
கொய்யா திருடன்
இரவு தொடங்கிவிட்டது
கொய்யா மரத்துககு காவலிட்டேன் ...
வவ்வால்கள் வந்துவிடும்...!
விருந்து
கோவில் திருவிழா முடிந்துவிட்டது...
கொண்டாட்டம் தொடங்கியது...
கறிக்கடை வந்த காக்ககைகளுக்கு...!
குடை கேடையங்கள்
வானமெங்கும் யுத்தமுழக்கம்
படையெடுக்கும் மேகங்கள்..
குடைக் கேடயங்களுடன் நான்!
வெட்கம்
வித விதமாய்
வெளிநாட்டுப் பறவைகள்..
வந்திறங்கியது அந்த
மரத்தில்.. வெட்கத்தில்
சிலிர்த்தது மரம்...!
Comments
Post a Comment